அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (13/09/2022) அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடாக சான்றுகள் வழங்கியதாக கூறி விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூபாய் 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், திருச்சி திருவானைக்காவலை அடுத்த கணபதி நகரில் எல்.இ.டி பல்பு மொத்த விற்பனையாளர் சுதாகருக்கு சொந்தமான ஏஜென்சியில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த காரில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்கிற கோணத்தில் தீவிரமாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.