தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்க ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ செயல்படுத்தப்படும். மாதம் ஒருநாள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும். ஓராண்டில் 2,500 கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காளான் உற்பத்திக் கூடம் அமைக்க 100 மகளிருக்கு ரூபாய் 1 கோடி மானியமாக வழங்கப்படும்.
கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூபாய் 30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும். மேல்மலையனூர், வல்லம், மாதனூர், அரூர் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தியை உயர்த்த 25 ஆயிரம் ஏக்கரில் துத்தநாக சல்ஃபேட்டும், ஜிப்சமும் 50% மானியத்தில் வழங்கப்படும். தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் நான்கு அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "வேளாண் சட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் செய்துள்ளது. தெரிந்தே, வேண்டுமென்றே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கலாம்" என்றார்.