சென்னை திரிசூலத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திரிசூலம் பகுதியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்துவருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலத்தை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், முதற்கட்டமாக அங்குள்ள சில வீடுகளுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் இன்று வருகை தந்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய போலீஸார், அவர்களை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது சிலர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.