Skip to main content

'பொதுமக்கள் கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்க...''-கிராம சபையில் அமைச்சர்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

'Officials should answer the public question ...' '- Minister Meyyanathan in the Grama saba

 

கரோனா கட்டுப்பாடுகளால் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகார பலமிக்க கிராம சபைக் கூட்டங்கள் இன்று காந்தி ஜெயந்தியில் நடந்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலமரத்தடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, ''கிராம சபை என்பது பலமான அதிகாரம் மிக்க அமைப்பு. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் பலமானதாக இருக்கும்'' என்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராகக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்கள்.

 

செங்கோடன் என்பவர் பேசுகையில்,''கொத்தமங்கலம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி. இங்கு 25 நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. ஆனால் ஒரே ஒரு இயக்குநர் தான் உள்ளார். ஒருவரே 25 தொட்டிகளை இயக்க முடியுமா?  பல  இடங்களில் மாதம் ரூ.250க்கு பலரை நியமித்தார்கள். அவர்களுக்கும் பல மாதமாகச் சம்பளம் இல்லை. மேலும் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்கா, விளையாட்டு அரங்கம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது'' என்றார்.

 

இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்கள் என்று அமைச்சர் சொல்ல, திட்ட அலுவலர், ''விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என்றார். ''விரைவில் என்றால் எத்தனை நாளில் என்று சொல்லுங்கள்'' என்று அமைச்சர் கேட்க, ''ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும்'' என்றார்.

 

தொடர்ந்து ஒரு பெண் பேசுகையில், ''நூறு நாள் வேலையை 150 நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எங்களுக்கு ஆண்டுக்கு 12 நாள் தான் வேலை கிடைக்கிறது''என்றார். இந்த கோரிக்கையையும் சரி செய்யப்படும் என்றார் அதிகாரி.

 

விஜயகுமார் என்பவர் பேசுகையில், ''நெகிழி பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களிடம் மட்டும் சொல்வதைவிட நெகிழி தயாரிப்பு நிறுவனங்களை மூடினாலே நெகிழி பயன்பாட்டுக்கு வராதே. நூறு நாள் வேலையில் தண்ணீர் செல்லும் வரத்து வரிகளில் தடையான ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சீரமைப்பதில்லை. பிறகு எப்படி தண்ணீர் போகும்?' 'எனக் கேட்டார்.

 

அதற்குப்  பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், ''நெகிழியால் முற்றிலும் பாதிக்கப்படுகிறோம். அதனால் தான் 3,000 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து விற்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும் அதனைப்  புறக்கணிக்க வேண்டும். அதேபோல வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அதிகாரிகள் அகற்ற வேண்டும்'' என்றார்.

 

பிரபாகரன் என்பவர் பேசுகையில், ''அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பெயரைப் பயன்படுத்தி பணம் எடுத்து மோசடி நடந்திருக்கிறது?''என்றார்.

 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், ''இது பற்றி உடனே சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடுகிறேன். ஒரு வாரத்தில் அறிக்கை வேண்டும்'' என்றார்.

 

அதேபோல மின்வாரியம், சாலை, தெருவிளக்கு, குடிநீர், புதிய வீடுகள் பற்றி கேள்விகளுக்கும் அதிகாரிகளையே பதில் கூற வைத்ததோடு. அதிகபட்சம் 2 முதல் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.