
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,687 இருந்து 18,842 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,516 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 844 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 939 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் ஏழாவது நாளாக கரோனா பாதிப்பு 1,000 என்று பதிவாகிவந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. செங்கல்பட்டில்-465 பேருக்கும், கோவை-181, குமரி-60, திருவள்ளூர்-161, காஞ்சிபுரம்-80, விழுப்புரம்-38, சேலம்-61, நெல்லை-112, தூத்துக்குடி-84, திருச்சி-58, ராணிப்பேட்டை-39 பேருக்கு என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.