கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க தங்க கவசம் ஒன்றை வழங்கியிருந்தார். தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்க கவசமானது தேவர் சிலை சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும். இந்நிலையில் தற்பொழுது அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்க கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்துள்ளது.
இரு தரப்பினரும் மாறி மாறி அதற்கான உரிமைகோரி வந்த நிலையில், அதற்கான பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தங்க கவசம் பேங்கில் இருக்கிறது. சாவி என்கிட்ட இருக்கிறது. நான்தான் சாவியை கொடுப்பேன். ஆனால் இவ்வளவு கட்சி விஷயமெல்லலாம் வரும் என நினைக்கல, இதெல்லாம் எனக்கு வேண்டாம். ஜெயலலிதா என்கிட்ட நல்லா பேசும். ஓபிஎஸ் இதுவரைக்கும் என்கிட்ட வந்து எதுவும் சொல்லல. எடப்பாடி பழனிசாமி சார்பாக வந்தாங்க, வந்தவர்களுக்கெல்லாம் மரியாதையாக காஃபி எல்லாம் கொடுத்து அனுப்பினோம். அவரும் வேணாம், இவரும் வேணாம் அம்மா தானே கொடுத்துச்சு நானே எடுத்துட்டு போறேன்னு கேக்கலாம்னு இருக்கேன். இப்ப ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட்டு இருக்கு. முன்னெல்லாம் ஓபிஎஸ் வருவாரு, கையெழுத்து போடுவேன் அவரும் கையெழுத்து போடுவார் 25ஆம் தேதி எடுத்துட்டு வந்துருவோம். 31ஆம் தேதி முடிந்த உடனே கொண்டுட்டு போய் பேங்கிலேயே வைத்துவிடுவோம். இப்ப அவங்களுக்குள்ள சண்டை. நான் என்ன செய்ய முடியும். ஒன்னும் செய்ய முடியல. இதுக்கு மேல என்ன சொல்ல சொல்றீங்க என்ன'' என்றார்.