Skip to main content

‘குடியிருக்க வீடில்லை... 50 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பலனில்லை’ - போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

No house to live in, People involved in the struggle

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் காலங்காலமாக குறுகிய இடப்பகுதியில் வசித்துவருகிறார்கள். கால ஓட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் பிறந்து வளர்ந்து, திருமணமாகி, அவர்களுக்குக் குழந்தைகள் என மக்கள் தொகை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் அதற்கேற்றவாறு அவர்கள் குடியிருக்க போதிய அளவு இட வசதியும் இல்லை, வீடும் இல்லை. எனவே காலங்காலமாக குடியிருக்க வீடு இல்லாத தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா தர வேண்டும் என்கிறார்கள். இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மனுக்கள் கொடுத்து பார்த்துவிட்டார்கள்.

 

எனினும், அவர்களது குடியிருப்பை விரிவுபடுத்துவதற்கு அரசு அதிகாரிகள் இடம் ஒதுக்கித் தரவில்லை, கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், அவர்கள் ஏற்கனவே இந்த நெருக்கடியில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் பகுதியை ஒட்டி கோயிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதில் பல பட்டியலின குடும்பத்தினர் அவர்களாகவே சென்று குடிசை போட்டு வாழ்ந்துவருகிறார்கள். அந்தப் பகுதிக்கு சாலை வசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதி இப்படி எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. காரணம், அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது. அந்த இடத்தை யாருக்கும் பட்டா கொடுக்க முடியாது. அதையும் மீறி அந்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி செய்து கொடுக்க அரசு சட்ட விதிமுறைகளில் இடமில்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.  

 

No house to live in, People involved in the struggle

 

இதனால் அந்த மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச வீடு கட்டும் திட்டம் உட்பட எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை. ‘இப்படிப்பட்ட நிலையில், அந்தக் குடிசைகளில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது  குடிசைப்பகுதிக்கு நடந்து செல்கிறோம். குடிசைப்பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த வனம் போன்ற காடுகள் உள்ளன. அப்பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளன. இவ்வளவு துன்பத்துடன் துயரத்துடன் சிரமத்துடன் அந்தக் குடிசை பகுதிகளில் வாழ்ந்துவருகிறோம். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து, பாதுகாப்பு தேடி அலைந்தோம். எனவே எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.’

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தயா பேரின்பன் தலைமையில் 23ஆம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அம்மக்கள் அறிவித்தனர். அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சமையலுக்குத் தேவையான பொருட்கள் பாத்திரங்கள், பாய், தலையணை, படுக்கை என ஊர்வலமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்குள் குடியேற முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

No house to live in, People involved in the struggle

 

அப்போது அதிகாரிகள் தரப்பில் விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். காலதாமதம் செய்தால் மீண்டும் போராட்டத்தில் இறங்கப் போவதாக செங்கமேடு பட்டியலின மக்கள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.