Skip to main content

“பாதயாத்திரை பக்தர்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை” - கவலையில் முருக பக்தர்கள்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனி முருகனைத் தரிசிக்க, பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வரும் 18ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள தேவகோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முருக பக்தர்கள், பாதயாத்திரையாகச் சென்று முருகனைத் தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள். 

 

இந்த நிலையில், கரோனா, ஒமிக்ரான் நோய் தொற்று திடீரென அதிகரிக்க, அதனைக் கட்டுபடுத்தும் விதமாக, தமிழக அரசு வாரத்தில் கடைசி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தடை விதித்துள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு  இருக்கிறது. அப்படி இருந்தும் முருக பக்தர்கள், முருகனைத் தரிசிக்க பாதயாத்திரையாக வருகிறார்கள். இப்படி வரக்கூடிய முருக பக்தர்கள், இந்த வாரத்தில் மூன்று நாட்களில் முருகனைத் தரிசிக்க முடியாததால் அடிவாரத்தை மட்டும் சுற்றிவிட்டு முருகன் தரிசித்த நினைப்போடு மீண்டும் ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால் மற்ற நாட்களில் வரக்கூடிய முருக பக்தர்கள் எப்பொழுதும் போல் முருகனைத் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள்.

 

இது சம்பந்தமாக காளையார்கோவில், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் ஆகிய பகுதியில் இருந்து முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த முருகபக்தர்களிடம் கேட்ட போது, “தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் முருகனைத் தரிசிக்க பாதயாத்திரையாக வருவது வழக்கம். எங்க ஊரில் இருந்து பழனி வரை 250 கிலோ மீட்டர் இருப்பதால் ஐந்து நாள் கணக்கு போட்டு முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வருவது வழக்கம். அப்படி வரும்போது, எங்களுக்கு அங்கங்கே பொது மக்கள் அன்னதானமும் வழங்குவார்கள். ஆனால், இந்த வருடம் கரோனா பீதியால் நாங்கள் வரும் பகுதிகளில் அன்னதானமும் கிடைக்கவில்லை. 

 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளதால், ஹோட்டல்கள் வழி நெடுகிலும் சரிவரத் திறக்காததால் சாப்பாடும் கிடைக்கவில்லை. டீ, காபியும் குடிக்க முடியவில்லை. அதனால் கையிலிருந்த பிஸ்கட்டையும் தண்ணீர் குடித்துக் கொண்டும் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறோம். அந்தத் தண்ணீரைக்கூட காசு கொடுத்து வாங்கி வருகிறோமே தவிர முருக பக்தர்களுக்காக தண்ணீர் வசதிகள் கூட இல்லை. அரசு இதனை கவனத்தில் கொண்டு தண்ணீர் வசதி செய்துதர வேண்டும். அதுபோல் இந்த ஆண்டு எங்க ஊர்ல இருந்து திண்டுக்கல் வரை சாலைகள் விரிவுபடுத்தி வருவதால் ரோட்டோரங்களில் முருக பக்தர்கள் நடப்பதே கஷ்டமாக இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனிவரை பாதயாத்திரை பக்தர்களுக்கு நடைபாதை இருப்பதால் நடந்து செல்வது எளிதாக இருக்கிறது. இதன் மூலம் இன்னும் இரண்டு நாட்களில் முருகனை தரிசித்து விட்டு மீண்டும் ஊர் திரும்புவோம்” என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.