
2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து எனும் வாக்குறுதி. திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின், மே மாதம் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெரும்பான்மையானோரின் கவனத்தை ஈர்த்தது நகர பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம்.
இந்தத் திட்டம் மே.8ம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்துவருகிறது. இந்நிலையில், கட்டணமில்லா பேருந்துகளைக் கண்டறிவதை எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காட்ட அதன் முகப்புகளில் ’பிங்க்’ நிற வணத்தை அடிக்க முடிவு செய்தது. அதன்படி முதல் கட்டமாக 60 பேருந்துகளின் முகப்பில் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கிவைத்தார். இந்தப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமலும், ஆண்கள் கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம்.