Skip to main content

இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இசைக் கலைஞர் பலி! 

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

 

nlc truck two wheeler incident police investigation

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி வடக்கு வெள்ளூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் தபேலா வாசிக்கும் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விருத்தாசலத்தில் இசைக் கச்சேரியை முடித்துவிட்டு இன்று (14/08/2021) காலை அவரது சொந்த ஊரான நெய்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற லாரி, ஊமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த ராஜேஷ் மீது மோதியது. 

 

இதில் ராஜேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தால் உயிரிழுந்த ராஜேஷ் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மோதியதில், என்.எல்.சி. தொழிலாளி கோவிந்தன் என்பவர் உயிரிழந்ததால், அப்பகுதி பொதுமக்கள் 10 சாம்பல் லாரிகளை அடித்து நொறுக்கியும், 5 சாம்பல் லாரிகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அச்சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் 3 ஆவது நாளில் மீண்டும் சாம்பல் லாரியால் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், அவ்வாறு லாரிகள் அதிவேகமாக செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்எல்சியில் கன்வேயர் பெல்ட் எரிந்து விபத்து

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
 Conveyor belt fire accident at NLC

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் நிலக்கரியை மேலே கொண்டு வர பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள 2வது சுரங்கத்தில் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பதற்காக கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் ஓட்டு தலை (drivehead) பகுதியில் நேற்று மாலை  திடீரெ தீப்பிடித்தது.

இதனால் கன்வேயர் பெல்ட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.  இந்த தீ விபத்தினால் 2 வது சுரங்கம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் தீயணைப்பு த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. கன்வேயர் பெல்ட் மற்றும் ஓட்டு தலை (drivehead) பகுதி உராய்வின் காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.