Skip to main content

"எங்களுக்கு இதுவரை விடியலே இல்லை" - முதல்வருக்கு தினமும் கடிதம் அனுப்பும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள்..!  

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

NLC Contract workers sending letters to CM

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறது. அதேசமயம், நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் 25 ஆண்டுகளாகக் கிடப்பிலேயே இருப்பதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

 

என்.எல்.சியில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'விடியலை நோக்கி' என்ற தலைப்பில் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடர்ந்து அச்சிட்ட கடிதங்களை அஞ்சல் மூலமாக அனுப்பி வருகின்றனர்.

 

"என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் விடியலை நோக்கி" என்ற தலைப்பிலான அந்தக் கடிதத்தில், "கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், சொசைட்டி தொழிலாளர்களாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றோம். எங்களில் பெரும்பாலானோர் நிறுவனத்திற்காக வீடு, நிலம் கொடுத்து, என்.எல்.சியில் அப்ரண்டிஸ் முடித்தவர்கள். நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலைகளைச் செய்யும் எங்களுக்கு நிரந்தர தொழிலாளர்கள் பணி கிடைக்கவில்லை. உலக விடியலுக்குச் சேவல் கோழிகளாகக் கூவினாலும் எங்களுக்கு விடியல் இல்லை.

 

NLC Contract workers sending letters to CM

 

மேலும், கரோனா தாக்குதலுக்கு பலரும் பலியாகி உயிர்களை இழக்கிறோம். தொழிலாளர்களை தாயுள்ளத்தோடு பாதுகாக்க வேண்டிய என்.எல்.சி நிர்வாகம் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. வேலை நிரந்தரம் இல்லை, நல்ல சம்பளம் இல்லை, இன்று உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. 

 

கரோனா குறித்த மத்திய மாநில அரசுகளின், உலக சுகாதார அமைப்பின்  உத்தரவுகள் இங்கே காற்றில் பறக்கிறது. நெய்வேலி இருப்பது தமிழ்நாட்டில்தானா? தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகத்தில் கீழா அல்லது வேறு ஒரு ஆட்சி நிர்வாகத்தின் கீழா என்கிற ஐயப்பாட்டில் வாழ்கிறோம்.

 

எனவே தாங்கள் உடனே தலையிட்டு, போர்க்கால நடவடிக்கை எடுத்து என்.எல்.சி நிறுவன உற்பத்திக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் இன்ட்கோசெர்வ் சொசைட்டி தொழிலாளர்கள்,  ஹவுஸிங்கோர்ஸ் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்காலம்' கானல் நீராகி' விடாமல்,  வாழ்வாதாரம் இழந்திட்ட என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட AMC/NonAMC, இறந்தவர்களின் வாரிசுகள், சூப்பர்வைசர்கள் இவர்களின்  துயர்துடைப்பீர்கள், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடியலை நோக்கிக் காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த கடிதத்தை என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், AMC/NonAMC தொழிலாளர்கள் தொடர்ந்து தினமும் அனுப்பி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.