Skip to main content

தமிழகத்தில் இரவு ஊரடங்கு... வெறிச்சோடிய சென்னை கோயம்பேடு! (படங்கள்)

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

 

இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்..தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள் பயணத்தை முடிக்கும் வகையில், அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்து சங்கம் சார்பிலும் இதேபோல் பகலில் பயணத்தை முடித்துக்கொள்ளும் வகையில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் பகலில் பேருந்தை இயக்கினால் கூட்டம் குறைவாக இருக்கும், பயணிகள் பயண நேரத்திற்குத் திட்டமிட்டு வருவது கடினம் என்பதால், ஆம்னி பேருந்துகளை இயக்குவது கடினம் எனத் தனியார் பேருந்து சங்கத்தின் ஒருசாரார் அறிவித்தனர். இந்த மாறுபட்ட கருத்து குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இறுதியாக பகலில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் எனத் தனியார் ஆம்னி பேருந்து சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். 

 

இந்நிலையில் இன்று இரவு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் வழக்கமாக இரவில் பேருந்து நிலையத்தில் தங்கும் குடிமகன்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் ஆகியோரை பேருந்து நிலைய காவலாளிகளும் காவல்துறை அதிகாரிகளும் அப்புறப்படுத்தினர். இரவு 9 மணிக்கு மேல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.