Skip to main content

இரவு நேர ஊரடங்கு... உழைக்கும் வர்க்கத்தை தாக்கும் வறுமை வைரஸ்!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

 Night curfew ... poverty 'corona' for the working class

 

கடந்த வருடத்தில் ஏற்பட்டதுபோல் மீண்டும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டது என விசைத்தறி தொழிலாளர்களிடமிருந்து பரிதாபக் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைவிட தொழில் முடக்கம், அதனால் வருவாய் இழப்பு, அன்றாட உணவு தேவைக்கே பரிதவிப்பு என்கிற வறுமை வைரஸ்தான் எங்கள் வாழ்வில் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது எனக் கண்ணீர் விட தொடங்கி விட்டனர்.

 

தொழில் முடக்கத்திற்கு உதாரணமாக, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் எனப் பல பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் மீட்டர் ரயான் துணி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

 

 Night curfew ... poverty 'corona' for the working class

 

இந்நிலையில் இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிப்படைந்துள்ளது என விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சென்ற 15 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு உற்பத்தியான ஜவுளிகள் அனுப்ப முடியாமல் ரூபாய் 200 கோடி மதிப்பிலான துணிகள் இங்கேயே தேக்கமடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இப்போது தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கும் வந்துவிட்டது.

 

 Night curfew ... poverty 'corona' for the working class

 

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிஃப்டும், அடுத்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஒரு ஷிஃப்டும் என்ற அடிப்படையில் தான் விசைத்தறிகள் இயங்குகிறது. இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்து, அதன்படி 20 ந் தேதி இரவு முதல் காலை நேர ஷிஃப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிஃப்ட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 30 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் 15 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதன் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.