Skip to main content

விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு; கூட்டத்தில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

neyveli nlc land issue minister mla farmers are participated

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்.எல்.சி அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமைத் தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும்  திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், புவனகிரி அருண்மொழிதேவன், கடலூர் ஐயப்பன்,  காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல்வன் மற்றும் வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்  உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.

 

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச சரியீட்டுத் தொகையாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு கொடுத்த உரிமையாளர்களுக்கு சுமார் 72 லட்ச ரூபாய் வரை அளிக்கப்படவுள்ளது. அதாவது நில மதிப்பு, வேலைவாய்ப்புக்கான ஒரு முறை பணப்பலன், வீட்டின் மதிப்புத் தொகை மற்றும் இதர மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான பணப்பலன் உள்ளிட்டவை சேர்த்து ஒட்டுமொத்த பணப்பலன்களாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தியதற்கு சரியீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 லட்சம் என முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட படி, தற்போது தமிழ்நாடு அரசு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 லட்சம் என நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி ஆகிய கிராமங்களில் 548 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 29 நபர்களுக்கு ரூபாய் 15.68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நில எடுப்புப் பணிகள் குறித்து மக்கள் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்காக என்.எல்.சி நிர்வாகம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் மையம் ஒன்றை தனியாக விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நில எடுப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் சமூகப் பொறுப்புணர்வுக்கான நடவடிக்கைகளுக்கு என்.எல்.சி நிர்வாகத்திடமிருந்து ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டதன் பேரில் என்.எல்.சி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

நிலம் கொடுத்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவர் என்ற வகையில் 1000 நபர்களுக்கு ஒப்பந்த முறை பணிகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே என்.எல்.சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், மேலும் நிலம் கொடுக்கும் உரிமையாளர்களின் குடும்பத்தில் உள்ள டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்த இளைஞர்களுக்கு தொழிற்கல்விக்கான பயிற்சிகள் 3 ஆண்டுகள் வழங்கி சுமார் 500 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அடுத்த 4 ஆண்டுகளில் வழங்க வழிவகை செய்யப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட 192 பணிகளுக்கான வேலைவாய்ப்பிலும், தற்போது வெளியிடப்பட இருக்கும் 150 பணிகளுக்கான வேலைவாய்ப்பிலும் நிலம் வழங்கிய உரிமையாளர்கள் குடும்பத்தில் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 20 போனஸ் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக நிலம் கொடுத்த உரிமையாளர்களில் பெரும்பாலானோர் நிரந்தர வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

neyveli nlc land issue minister mla farmers are participated

 

கூட்டம் தொடங்கியவுடன் கரிவெட்டி, கத்தாழை, முத்துகிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு வந்திருந்தனர். விவசாயிகளை போலீசார் மண்டபத்துக்கு உள்ளே விட மறுத்ததால் வடலூர் - பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், ‘விவசாயிகளை அனுமதிக்காததால் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி’ வெளியேறினார். புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், நிரந்தர வேலை; ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு; குழு அமைக்க வேண்டும்; ஆர் அண்ட் ஆர் பாலிசியை அமல்படுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசிவிட்டு வெளியேறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.