Skip to main content

நெஞ்சைப் பதற வைக்கும் நாமக்கல் சம்பவம்! - சிறுமிக்கு நேர்ந்த பெருங்கொடுமை; தாய் உட்பட 13 பேர் கைது!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

namakkal district children incident 13 persons arrested police investigation

 

நாமக்கல் அருகே, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்காள் கணவர், பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 55). இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45). தறித் தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் உள்ளூரிலேயே வசிக்கின்றனர்.

 

இவர்களுடைய மூத்த மகள் வேணி. இவருடைய கணவர் சின்ராஜ். பத்மநாபன் - மகேஸ்வரி தம்பதியின் கடைசி மகள் சுவாதி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணேசனுக்கு உடல்நலம் குன்றி படுத்தப் படுக்கையாக இருப்பதால், அவரை பார்த்துக் கொள்வதற்காக சுவாதி, 6- ஆம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டாக உள்ளூரில் எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுவாதியின் உடல்நலம் மோசமானது. அவருடைய அக்காள் வேணி நேரில் வந்து விசாரித்தபோதுதான் தங்கையை காமுகர்கள் ஈவிரக்கமின்றி பாலியல் வன்முறை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன.

 

வேணியின் கணவர் சின்ராஜ், மனைவியின் தங்கை... அதுவும் சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் அதிர்ச்சியான விவகாரம் தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து நண்பர்கள் மத்தியில் பெருமையாகச் சொல்லி வந்துள்ள சின்ராஜ், தன் நண்பர்களுக்கும் சிறுமியை இரையாக்கி இருக்கிறார். இந்த கொடூரச் சம்பவம் எல்லாம் சிறுமிக்கு 12 வயது ஆக இருக்கும்போது இருந்தே நடந்துவந்துள்ளது.

 

namakkal district children incident 13 persons arrested police investigation

 

அக்காள் கணவரின் போக்கு நாளடைவில் பிடிக்காமல் போகவே, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த, குமாரபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

 

கண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்றாலும் கண்ணனும் சிறுமியை விட்டுவைக்கவில்லை. மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் சிறுமியை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

 

அவரும் தன் நண்பர்களுக்கு, சிறுமியை இரையாக்கிய கொடூரங்களும் நடந்துள்ளன. இதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்ட சிறுமியின் அக்காள் வேணி, இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லப்போக, அவர்களுக்கு மகளுக்கு இப்படியொரு கொடூரங்கள் நடந்ததே தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.

 

மேலும், சின்ராஜின் நண்பர் குமார்தான் அடிக்கடி சிறுமியை நாசப்படுத்தி இருக்கிறார். முதலில் அவர் மீது புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட குமாரும் சின்ராஜும், காவல்துறையில் புகார் அளித்தால் மூத்த மகள் வாழாவெட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று அப்பாவி பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

 

இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமார் 10 ஆயிரம் ரூபாயை சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார். அப்போது படுத்தப் படுக்கையாக இருந்த கணவனின் வைத்திய செலவுக்குப் பணம் தேவை என்பதால் மகேஸ்வரியும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு காவல்துறையில் புகார் செய்யாமல் விட்டுவிட்டார். இந்த விவகாரத்தை மகேஸ்வரி, சின்ராஜ், குமார் ஆகிய மூவரும், யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர்.

 

namakkal district children incident 13 persons arrested police investigation

 

ஆனாலும் இதையெல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் தெரிந்துகொண்ட வேணி, கணவரே தன் தங்கையை சூறையாடியதைக் கண்டு பொறுக்க முடியாமல், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகே இந்தச் சம்பவம் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. 

 

உடனடியாக சைல்டு லைன் மூலமாக, பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாள். கடந்த 50 நாள்களுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்திய ரஞ்சிதா பிரியா, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார். 

 

காவல் ஆய்வாளர் ஹேமாவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், சிறுமியை 12 பேர் பாலியல் வல்லுறவு செய்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவளது அக்காள் கணவர் சின்ராஜ் (வயது 35), பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன் (வயது 35), குமார் (வயது 29), வடிவேல் (வயது 29), பன்னீர் (வயது 32), மூர்த்தி (வயது 55), சேகர் என்கிற நாய் சேகர் (வயது 25), கோபி (வயது 32), அபிமன்னன் (வயது 32), சரவணன் (வயது 30), சங்கர் (வயது 30) ஆகியோரை ஏப். 13- ஆம் தேதி கைது செய்தனர். முருகன் (வயது 35) மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரையும் புதன்கிழமை (ஏப். 14) கைது செய்தனர்.

 

மேலும், குற்றம் எனத் தெரிந்தும் சிறுமியின் தாயார் மகேஸ்வரி குற்றத்தை மறைக்கும் நோக்கில் குமாரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டதால் அவரையும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்து, கைது செய்திருக்கிறது காவல்துறை. அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

கைதான அனைவரையும் நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் புதன்கிழமை காலையில் ஆஜர்படுத்தினர். அடையாள அணிவகுப்பு நடத்தும்போது சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் முகமும் முழுமையாகத் தெரியாதபடி தலையோடு சேர்த்து முகமூடி அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின்பேரில், அவர்கள் அனைவரும் நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஹேமாவதியிடம் கேட்டபோது, ''எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக புகார் வந்த 5 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் 11 பேரை கைது செய்து விட்டோம். தலைமறைவாக இருந்த ஒருவரையும் மறுநாள் கைது செய்துவிட்டோம். குற்றத்தை மறைத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் கைது செய்திருக்கிறோம்.

 

பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் கிடைக்காதபோது தன் அக்காவின் கணவர்தானே என அவரை நம்பிப் பழகியிருக்கிறாள். சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட அவளது அக்காள் கணவர் சின்ராஜ், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சிறுமியின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவளை நாசப்படுத்தி இருக்கின்றனர். சிறுமிக்குப் பணமோ அல்லது துணிமணிகள் போன்ற பொருளாசையோ காட்டப்பட்டதாக தெரியவில்லை'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம்.