![Nagai – Kangesan passenger ferry service stop](http://image.nakkheeran.in/cdn/farfuture/yHz9jyR6ChRgh3hezWlGnx6J7b0-MXOdYmwJsKbqbAQ/1697615356/sites/default/files/inline-images/nagai-srilanka-boat_0.jpg)
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (20.10.2018) நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் சொந்த ஊர் திரும்ப காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நாகப்பட்டினம் - காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தினசரி சேவையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.