Skip to main content

நாம் தமிழர் முத்துக்குமார் படுகொலை... குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை!

Published on 19/08/2021 | Edited on 20/08/2021

 

naam tamilar party muthukumar incident court judgement

 

சுப. முத்துக்குமார் என்பவர் மதுரை பக்கத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து தங்கியிருந்தார். 

 

நாம் தமிழர் கட்சி தொடங்கியபோது தமிழ்நாடு முழுவதும் சென்று எண்ணற்ற இளைஞர்களைக் கட்சியில் இணைத்தவர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். சீமான் எங்கே பொதுக்கூட்டம் நடத்தினாலும், சில நாட்களுக்கு முன்பே சென்று பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவருவார். இப்படி நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர். திருமணமாகி சில மாதங்களில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சைக்குச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்கச் சென்றபோது அங்கு தயாராக காத்திருந்த ஒரு கும்பல் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலறிந்து சீமான் வந்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்துக் கதறி அழுதார். வடகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கொலையாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும்; முத்துக்குமார் கொல்லப்பட்ட இடத்தில் நினைவு இல்லம் அமைக்கப்படும் என்று சீமான் வலியுறுத்தினார். 

naam tamilar party muthukumar incident court judgement

 

இது தொடர்பாக, முத்துக்குமாருக்கு நெருக்கமானவர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாட்சிகளும் போடப்பட்டன. ஆனால் சாட்சிகள் சரியாக இல்லை. குற்றப்பத்திரிகையிலும் குளறுபடி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த நான்கு மாதங்களாக தீர்ப்பு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டதால், கடுமையான தண்டனை இருக்கும் என்று முத்துக்குமாரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் .

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (18/08/2021) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலை செய்யவில்லை என்றால், முத்துக்குமாரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

“முத்துக்குமார் உயிரோடு இருக்கும்வரை கட்சி பயன்படுத்திக்கொண்டது. அவர் கொல்லப்பட்ட பிறகு கண்டுக்கல. அதனால முத்துக்குமாருக்காக கட்சியில் இணைந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார்கள். பலர் அமைதியாகவே உள்ளனர். முத்துக்குமாருக்காக ஒரு நினைவுச் சின்னம் கூட இல்லாமல் போனது. அவரது குடும்பத்தில் எஞ்சியிருந்த அவரது சகோதரி கூட இப்ப உயிரோட இல்லை. முத்துக்குமார் கொலைக்கு நீதியும் கிடைக்கவில்லை” என்கிறார்கள் முத்துக்குமார் பாசறை தம்பிகள். நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.