Skip to main content

வீடுவரை வந்து மூதாட்டியை ஏமாற்றி, நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Mysterious person who came up to the house and cheated the old lady and stole the necklace

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூந்தலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (65). இவர் நேற்று (03.08.2021) வீட்டில் தனியாக இருந்தபோது, டிப்டாப் இளைஞர் ஒருவர் ஜெயக்கொடியிடம் வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக பவ்வியமாக கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜெயக்கொடி, வீட்டிலிருந்த பித்தளை பொருட்களைக் கொடுத்துள்ளார். பாலீஷ் செய்து கொடுத்தபோது பளபளப்பாக இருந்துள்ளது. இதையடுத்து வெள்ளிப் பொருட்கள் இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதை நம்பி வீட்டிலிருந்த வெள்ளி பொருட்களைக் கொண்டுவந்து ஜெயக்கொடி கொடுத்தபோது அதனை பாலிஷ் செய்து கொடுத்துள்ளார்.

 

அதுவும் நல்ல பளபளப்பாக இருந்துள்ளது. இதனைப் பார்த்து வியந்துபோன ஜெயக்கொடியிடம், “உங்கள் தங்க நகையைக் கொடுங்கள் இதேபோன்று உங்களுக்குப் புதுசாக மெருகு போட்டு தருகிறேன்” என்று டிப்டாப் ஆசாமி கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெயக்கொடி, தன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைக் கழற்றி கொடுத்துள்ளார். டிப்டாப் மனிதன் பாலிஷ் போடுவதற்குப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதில் நகை போடுமாறு கூறியுள்ளார். அவர் அந்தப் பாத்திரத்தில் பாலிஷ் போடுவதாக கூறி கையைப் பாத்திரத்தில் வைத்து கலக்கிக்கொண்டிருந்தார். பின்னர் ஜெயக்கொடியிடம் நகை இருந்த தண்ணீர் பாத்திரத்தை வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து கொதிக்க வைக்குமாறு கூறியுள்ளார்.

 

ஜெயக்கொடி அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்று அடுப்படியில் பற்ற வைத்து சூடுபடுத்த முயன்றபோது, அந்தப் பாத்திரத்தில் நகை இல்லாதது தெரியவந்தது. உடனடியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது டிப்டாப் ஆசாமி எஸ்கேப் ஆகியிருந்தார். இதுகுறித்து ஜெயக்கொடி உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டதைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக அந்த ஆசாமியைத் தேடிச் சென்றனர். அதற்குள் அந்த ஆசாமி வேறு ஒரு நபருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி மாயமாக மறைந்துள்ளார். இதையடுத்து ஜெயக்கொடி எடக்கல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் கூந்தலூர் கிராமத்திற்குச் சென்று ஜெயக்கொடியிடம் விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அதில் டிப்டாப் ஆசாமி தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதை வைத்து நகை ஏமாற்றிய அந்த மர்ம மனிதனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.