Skip to main content

போலீஸ் போல் நடித்து நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Mysterious people pretending to be police and robbing jewelry

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபளையம் அருகே உள்ளது காரனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி 40 வயது அலமேலு. அண்ணாமலை வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். அவரது மனைவி அலமேலு, அவர்களுக்கு சொந்தமான காட்டுக்கொட்டாய் நிலப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டனர். தனது ஒரு மகனுடன் காட்டுக்கொட்டாய் வீட்டில் வசித்துவந்தார் அலமேலு. இந்நிலையில், அலமேலு மகன் வேலை செய்வதற்காக கச்சிராபாளையம் சென்றிருந்தார். அன்றிரவு சுமார் 9 மணியளவில் அலமேலு மட்டும் கதவை சாத்திவிட்டு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

 

அப்போது டிப்டாப்பான மூன்று வாலிபர்கள் வீட்டுக்குள்ளே புகுந்தனர். அவர்கள் அலமேலுவிடம் நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் வீட்டுக்குள் ஒரு சிறுமியை மறைத்து வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரைக் காப்பாற்றுவதற்காக வந்துள்ளோம் என்று கூறிவிட்டு அலமேலுவின் பதிலைக் கூடக் காதில் வாங்காமல் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அலமேலு அவர்களைத் தடுத்து, கத்தி சத்தம் போட்டுள்ளார். அவரை சத்தம் போடவிடாமல் இருவர் அவரைப் பிடித்துக்கொண்டனர். ஒருவர் வீட்டுக்குள் இருந்த பீரோவைத் திறந்து அதில் இருந்த செயினை எடுத்துக்கொண்டார். அதோடு அலமேலு கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலி செயினையும் பறித்துக்கொண்டார்.

 

அதன்பிறகு அலமேலுவை வீட்டுக்குள் தள்ளி, வீட்டின் வெளிப்பக்கம் கதவைப் பூட்டிவிட்டு, அந்த 3 மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனர். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த அலமேலு கத்தி சத்தமிட்டுள்ளார். மேலும், ஒரு பகுதியில் ஓரமாகக் கிடந்த அவரது செல்ஃபோனை எடுத்து அவசர எண் நூறுக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கதவைத் திறந்துவிட்டு அலமேலுவை காப்பாற்றியுள்ளனர். மேலும், காயமடைந்த அவரை அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்து அவர்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று லட்சம் மதிப்புள்ள ஒன்பது சவரன் நகைகளைப் போலீஸ் போல நடித்து, வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.