தமிழகத்தில் பருவநிலை காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லையில் மர்ம வைரஸ் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லையை பொறுத்தவரை வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்து மூலகரிப்படி பகுதியில் வசித்து வந்த ஆதிநாராயணன் என்பவரின் 12 வயது மகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூலகரிப்படி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.
போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.
பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.
வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில் கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.
ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.
தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.
இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.
ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.