Skip to main content

சிறுத்தை மர்மச் சாவு... வயற்றில் முள்ளம்பன்றி இறைச்சி... வனத்துறையினர் விசாரணை

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

The mysterious death of a leopard

 

நெல்லை மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய களக்காடு, பாபநாசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் புலிகளின் காப்பகங்கள் உள்ளன. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகம் என்றும் புலிகளுக்கான சரணாலயம் உள்ளன. புலிகள் மற்றும் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் அதற்கு இடையூறு ஏற்படாத வகையிலிருக்கும்படியான காப்பகங்கள் உள்ளன. 

 

இந்தப் பகுதிகளில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் சுதந்திரமாக வாழ்வதற்காக மனிதர்களின் நடமாட்டம், போக்குவரத்துக்கள் மற்றும் அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய செல்ஃபோன் டவர்கள் அமைப்பு போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மேலும் புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதும், அதன் இறைச்சியை விற்பனை செய்வதும் வனத்துறை சட்டப்படி கடுமையான குற்றமாகும்.

 

இந்த நிலையில், பாபநாசம் காப்புக்காடு மத்தளம்பாறை பீட்டிற்கு உட்பட்ட சாமி என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்திலிருக்கும் மின்கம்பம் அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்திருக்கிறது. புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் செண்பகப் பிரியாவிற்கு இதுபற்றிய தகவல் போக, அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே சுமார் ஒன்றரை வயது மதிப்புள்ள ஆண் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்திருக்கிறது.

 

இதைத்தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை மேற்பார்வையாளர் அர்னால்ட், வினோத் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். அதுசமயம் சிறுத்தையின் வயிற்றில் முள்ளம்பன்றியின் இறைச்சி இருப்பது தெரியவந்தது. மேலும், அருகில் மயில் தோகைகள் சிதறிக் கிடந்ததுடன் அருகிலிருந்த மின் கம்பியில் சிறுத்தையின் முடி இருப்பதையும் பார்த்துள்ளனர்.

 

இதுகுறித்து வனத்துறையினர் சொல்வது என்னவெனில், "இறந்த சிறுத்தை அருகே மயில் தோகைகள் சிதறிக் கிடந்திருக்கின்றன. மின் கம்பியில் சிறுத்தையின் முடி வேறு இருக்கிறது. மின் கம்பத்திலிருந்த மயிலை சிறுத்தை பிடிக்க முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம். மேலும், அதற்கு முன்னதாக அது முள்ளம்பன்றியை வேட்டையாடியிருக்கும். நான்கு நாட்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும், பாதுகாக்கப்பட வேண்டிய புலிகள் காப்பகத்திலிருக்கும் சிறுத்தை இறந்தது பற்றிய விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.