![mrk college graduation function minister mrk panneerselvam participated](http://image.nakkheeran.in/cdn/farfuture/SlkQuCqxQEH9xhdoZNaJ-wtAQO7bnvv_h2j0zuM849A/1681103569/sites/default/files/inline-images/mark-art.jpg)
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று (09.04.2023) நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் வரவேற்று பேசினார். பட்டமளிப்பு விழாவினை எம்ஆர்கே நினைவு கல்வி அறக்கட்டளை அறங்காவலர் எம்.ஆர். தெய்வசிகாமணி துவக்கி வைத்தார். எம்.ஆர்.கே கல்லூரியின் நிறுவனரும், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை தெய்வமாக மதித்து அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் ஆர்வமுடன் இளமையிலேயே கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" எனப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், "இக்கல்லூரியின் தலைவர், கிராமப்புற மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என இந்த கல்லூரியை இந்த ஊரில் அமைத்துள்ளார். இக்கல்லூரியில் ஆராய்ச்சி பட்ட படிப்பில் மாணவர்கள் பட்டம் பெற்று இந்த கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து கூறினார். கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழியை வாசித்தார். இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் சிவப்பிரியா நன்றி கூறினார்.