Skip to main content

மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற அம்மா; நெல்லையில் விபரீதம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

The mother who strangled her daughter; Disaster in thirunelveli

 

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை ஊராட்சியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சி, ஆறுமுகக்கனி தம்பதியின் மகள் அருணா. 19 வயதான அருணா கோவையில் நர்சிங் படித்து வந்தார். தந்தை சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

 

கல்லூரி விடுப்பில் அருணா வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரது அருகிலேயே அவரது தாய் வாயில் நுரை தள்ளியபடி கீழே கிடந்துள்ளார். நள்ளிரவில் தாய் மற்றும் மகள் இருவரும் இவ்வாறு கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தாய் மற்றும் மகளை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

 

மருத்துவர்கள் அருணா மற்றும் அவரது தாயைப் பரிசோதித்ததில், அருணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவரது தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த சீவலப்பேரி காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருணா இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அருணாவின் பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தபோதும் மகள் தன் முடிவில் மாற்றம் கொள்ளததால், தாயே அவரது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. 

 

அருணாவைக் கொலை செய்த பின் தாயும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் காவல்துறையினர் மாணவியின் தாயிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Student lost their life due to inability to pay school fees!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டைக்கு அருகே உள்ளது காவலர் குடியிருப்பு ரேஷன் கடை தெரு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு 44 வயது ஆகிறது. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாரியம்மாள். இவருக்கு 40 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு 14 வயதில் நரேன் மற்றும் 10 வயதில் சுர்ஜித் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நரேனை அழைத்த பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு செலுத்த வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை உடனே கட்டும்படி அறிவுறுத்தியுள்ளனர். உடனே இது குறித்து தனது பெற்றோரிடம் நரேன் கூறியிருக்கிறார். அப்போது, விரைவில் பணத்தை செலுத்திவிடுவதாக கூறிய பெற்றோரால் பள்ளி கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட முடியவில்லை. இதனால், நரேனின் வகுப்பு ஆசிரியையிடமும், பள்ளியின் முதல்வரிடமும் கூடிய விரைவில் பள்ளி கட்டணத்தை கட்டி விடுவதாக நேரில் சென்று நாகராஜன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், திருநெல்வேலியில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அப்போது, பள்ளிக்குச் சென்ற நரேனிடம், பள்ளி கட்டணம் குறித்து பெற்றோரிடம் பேசி, விரைவில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆசிரியர் சொன்னது போல, நரேன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பெற்றோரிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அதனால், ஓரிரு நாட்களில் சேர்த்து கட்டலாம் என இருந்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் கடந்த மூன்றாம் தேதி பள்ளியில் தேர்வு நடந்துள்ளது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவர்களுக்கு முன்பாக, நரேனை அழைத்த வகுப்பு ஆசிரியை ஏன் இன்னும் பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான மாணவன் நரேன், மீண்டும் தனது பெற்றோரிடம் கூறி, உடனடியாக பள்ளிக் கட்டணத்தை செலுத்தும்படி கூறியுள்ளார். மேலும், இதனால் தனக்கு கூச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் காட்டும் கெடுபிடியால், நான்காம் தேதி தனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி கட்டணம் தயாரானதும் கட்டணத்தை செலுத்திய பிறகு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனால் நரேன் பள்ளிக்குச் செல்லாமல் அன்று வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நரேனின் தம்பி சுர்ஜித்தை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாயார் மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிக்குச் சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பால் போடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நரேன் அம்மா, கதவை தட்டிப்பார்த்திருக்கிறார், திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காத காரணத்தால், அச்சமடைந்த நரேனின் தாயார், பதற்றத்தோடு அக்கம் பக்கத்தினருக்கும் தனது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவு திறக்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் நரேன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மாணவனின் தற்கொலையால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அந்தப் பகுதியியைச் சேர்ந்தவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே, அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி தாளாளர் மீதும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையை போலீசார் உடனே கேட்காத காரணத்தால், நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருக்கிறது. 

அதன் பின்னர், பாளையங்கோட்டை பொறுப்பு உதவி கமிஷனர் ஆவுடையப்பன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, காவலர்கள் சொல்வதை ஏற்காமல் கோஷம் போட்டதால், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

இதில், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தனியார் பள்ளி மாணவன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தென்தமிழக மக்களின் துயர் துடைக்க நீண்ட வடதமிழக மக்களின் கரங்கள்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

தென் தமிழ்நாட்டில் பெய்த 200 செ.மீ அளவிலான பெருமழை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியை தத்தளிக்க வைத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து உணவு தரப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறி ஆகியுள்ளது, சிறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் தென் தமிழ்நாட்டில் பெய்த மழையை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அடுத்த நாள் இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தர முடியாது என கூறினார். இது தமிழக மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மழை சேதங்களை ஆய்வு செய்ய நிர்மலா சீதாராமன் தென் தமிழகத்திற்கு வருகிறார்.

people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

மழையால் பாதிக்கப்பட்ட அந்த நான்கு மாவட்டங்களை மக்களின் துயர் துடைக்க வட மாவட்டங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். தென் தமிழ் நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு உதயநிதி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றவர்கள் களம் இறங்கி உள்ளனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி அங்கேயே இருந்து நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சில கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலும், திருப்பத்தூர் மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ சார்பில் 15 லட்சத்துக்கும், கள்ளக்குறிச்சி மா.செ வசந்தம் கார்த்திகேயன் 12 லட்ச ரூபாய் மதிப்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்தும் சில லட்ச ரூபாய்க்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழியாக அனுப்பி வைத்தனர். இப்படி விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் ஆளும் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். தென் தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைக்க வடக்கு மாவட்ட மக்களின் கரங்கள் நீண்டுள்ளன.