ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோட்டில் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்களும் பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 24ந் தேதி காலையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வெண்டிபாளையம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் இருந்தது. அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பெயர் கவின் என்பதும் கரூரில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. பணத்திற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.