Skip to main content

“ராமஜெயம் வழக்கில் அவர்கள் சொல்வது வேறு, அறிக்கையில் இருப்பது வேறு” - வழக்கறிஞர் பேட்டி

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

mohan advocate talk about ramajayam case

 

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று நடைப்பயிற்சி சென்ற போது மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதில் வழக்கு சம்பந்தமாக எந்த துப்பும் கிடைக்காத காரணத்தினால் வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஆனால், சி.பி.ஐ விசாரணையிலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, சிறையில் உள்ள முக்கியக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்கு வெளியில் உள்ளவர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்திலிருந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, பிரபல ரவுடிகளான நரைமுடி கணேசன், மோகன்ராம் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகீல் அக்தர், ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

 

அந்தப் பட்டியலில் இருக்கும் 12 பிரபல ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த 12 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு “உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்றால், மாவட்ட எஸ்.பி.யால் தான் அனுமதி கோர முடியும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டி.எஸ்.பி. தான் மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எஸ்.பி. மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்து இந்த வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

அதன் பிறகு,  ரவுடி மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராமஜெயத்திற்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ. விசாரணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ராமஜெயம் கொலை வழக்கில்  அமைச்சர் கே.என்.நேரு  குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இந்த 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர்” என்று தெரிவித்தார். 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் ராமஜெயம் கொலை வழக்கு தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.