Skip to main content

''மராட்டியத்தைவிட அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்'' - மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

mk stalin speech

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2007 முதல் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’, ‘காயிதேமில்லத் பிறை’ மற்றும் ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துவருகிறது.

 

சென்னை வேப்பேரியில் நடந்த விழாவில் அம்பேத்கர் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்னுடைய ஆருயிர் சகோதரர் திருமா என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் சுடர் விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன். நான் இப்போது பேசிய பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன். இதற்கு மேல் எவ்விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

 

mk stalin speech

 

எனக்கு இவ்விருதினைத் தருகிறேன் என்று சொன்னபோது, எனக்கு அச்சமிருந்தது. அம்பேத்கரின் விருதைப் பெறும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். மாநில ஆதிதிராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. என்னை மேலும் இச்சமூகத்திற்குத் தொடர் பணியை செய்ய ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளீர்கள். ‘சட்டமன்றத்தில் எனக்கென்று சாதிப் பெருமை கிடையாது. மிகமிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் நான். பட்டம் பெற்றவன் அல்ல. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிப் பள்ளியும்தான்’ என்றார் கலைஞர். கலைஞர் வழிவந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமை கொள்பவன். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயரிட்டவர் கலைஞர்தான். அந்த வகையில், மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழைத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்.

 

அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதில் பெருமை. அம்பேத்கர் போல் இந்தியாவில் யாருமில்லை. முதன்முதலில் முதல்வராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார். பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார். அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இவ்வாட்சி நடைபெறுகிறது. நான் முதல்வராகப் பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அமைச்சர்கள், அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசினேன். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள். வன்கொடுமை நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. இம்மண்ணில் சமூக பாகுபாடுகள், பேதம் கூடாது. இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண்தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றைப் புறம்தள்ள வேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் சொன்னேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான், அவர்களின் வாழ்க்கையைப் போல் என் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வேன் என உறுதிகொள்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம்; வி.சி.க. மேல்முறையீடு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
NN

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை வி.சி.க. நாடியது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நேற்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்றத் தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பானை சின்னம் வேண்டும் என விசிக  தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த தேர்தலில் 1.16 சதவிகித வாக்குகளைத் தமிழகத்தில் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.