Skip to main content

2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து... நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்‌ஷன்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Minister who arrived at the scene at an unexpected time
                                                          மாதிரி படம்

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் உள்ள கிராம விவசாய மானாவாரி நிலங்களில் தற்போது பருத்தி, மக்காச்சோளம், விதைத்து வளர்ந்து வருகின்றன. இந்தப் பயிர்களுக்குள் ஊடுருவி வளர்ந்துவரும் புல் செடிகளை களை எடுப்பதற்காக பல்வேறு கிராமப்புற ஊர்களில் இருந்து பெண்கள் திட்டக்குடி கடந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று களை வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தினசரி நீண்ட தூரம் சென்று களை எடுப்பதற்கு உதவியாக இருப்பது அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தான்.

 

இந்த பேருந்துகளில் பெண்கள் செல்வதற்குத் தமிழக அரசு பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்துள்ளது. இந்த சலுகை உழைக்கும் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் பேருதவியாக உள்ளது. அப்படி வேலைக்குச் சென்று விட்டு தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகத் திட்டக்குடி பஸ் நிலையம் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை திட்டக்குடியில் இருந்து செவ்வேரி கிராமத்திற்குத் தினசரி மதியம் 12 மணி அளவில் செல்ல வேண்டிய அந்த பஸ் நீண்ட நேரமாகியும் புறப்படவில்லை. 40க்கும் மேற்பட்ட மகளிர் பொதுமக்கள் அந்த ஊர் வழியாக செல்வதற்கு  பஸ்ஸில் ஏறி அமர்ந்து காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்தும் அந்த பேருந்து புறப்படவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த பஸ்சை இயக்குவதற்கான கண்டக்டர் வரவில்லை அதனால் பஸ்புறப்படவில்லை என்று தகவல் கூறியுள்ளனர்.

 

Minister who arrived at the scene at an unexpected time

 

இதனால் கோபம் அடைந்த பெண் பயணிகள் திட்டக்குடி பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, மற்றும் திட்டகுடி டி.எஸ்.பி சிவன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏவுமான கணேசன் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதைக் கண்டு உடனே தனது காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் சென்று குறைகளைகேட்டார். அப்போது பொதுமக்கள் கண்டக்டர் இல்லாததால் இரண்டு மணி நேரமாக பேருந்து செவ்வேரி கிராமத்திற்கு புறப்படவில்லை என்பதை தெரிவித்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் உடனடியாக திட்டக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் குமரகுருவை வரவழைத்துப் பேசி வேறு கண்டக்டரை நியமித்து பஸ்சை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு நகரப் பேருந்துகளில் பெண்கள் கூட்டமாக செல்வதை அதில் பணி செய்யும் கண்டக்டர்கள், ஓட்டுனர்கள் விரும்புவதில்லை. பஸ் நிலையத்தில் நிற்கும் நகர பேருந்துகளில் பெண்கள் ஏறும்போது இந்த பேருந்து இப்போது செல்லாது, அந்தப் பேருந்தில் ஏறுங்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது. அந்த பேருந்தில் ஏறினால் இந்த பேருந்து இப்போது செல்லாது என்று அந்த நடத்துநர் இறக்கி விடுவதும் இப்படி பெண்களை அலைக்கழிக்க விடுகிறார்கள்.

 

வேறு வழியின்றி செல்லும் பேருந்துகள் பஸ் நிறுத்தங்களில் பெண்கள் நின்று பஸ்சில் ஏறுவதற்கு கையை நீட்டினால் பேருந்துகளை அங்கு நிறுத்துவதில்லை, இப்படி பெண்களை பல விதங்களிலும் அவமானப்படுத்துவதும் அவர்களை உதாசீனப் படுத்துவதும் எனஅரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெரும்பான்மையினர் செய்து வருகிறார்கள். அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தும் கூட அதன் மூலம் பெண்களுக்கு அது பயனில்லாமல் போகிறது. எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதுபோன்ற பஸ்களை இயக்கும் ஓட்டுனர் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இதே நிலை தொடருமானால் பெண்கள் போராட்டத்தில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வயிற்று பிழைப்புக்காக குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கூலி வேலைக்குச் செல்வதற்காக, கடைகளுக்கும், தினசரி வேலைக்கு அன்றாடம் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள்களின் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்