Skip to main content

அமைச்சர் கரோனா ஆய்வு: செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது.. மேலிடத்து உத்தரவாம்..! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Minister a v velu Corona discussion; Journalists are not allowed ..

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி குறித்த ஆய்வுக்கூட்டம் ஜூன் 10ஆம் தேதி (இன்று) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செங்கம் கிரி, வந்தவாசி அம்பேத்குமார், கலசப்பாக்கம் சரவணன், செய்யார் ஜோதி, எம்.பிக்கள் திருவண்ணாமலை அண்ணாதுரை, ஆரணி விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்ட சேர்மன், ஒன்றியக் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த போளுர் எம்.எல்.ஏ அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ஆரணி எம்.எல்.ஏ சேவூர். ராமச்சந்திரன் என இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர்கள் பெரும்பாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.


கூட்டம் தொடங்கியதும், கரோனா தடுப்புப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது குறித்தும், செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் எ.வ. வேலு பேசினார். தொடர்ச்சியாக கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை வெளியிட்டார். அதற்கடுத்த  சில நிமிடங்களில் கூட்ட அரங்கில் இருந்த செய்தியாளர்களிடம், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிக்கான ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். செய்தியாளர்கள் கலந்துகொள்ளக்கூடாது என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு. அதனால் வெளியே போங்கள் என செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறி செய்தியாளர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

 

Minister a v velu Corona discussion; Journalists are not allowed ..


வெளிப்படையான நிர்வாகம் எனச் சொல்லி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையில் இருந்து கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கிறார்; செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவை நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் அப்படி வெளிப்படையாக செயல்படும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்முறையாக புதிய அரசின் அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என உத்தரவிட்டு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.

 

இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய கூட்டம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் சொன்னார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக அல்லாத திமுக பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் எந்த அடிப்படையில் அமர்ந்திருந்தார்கள் என்கிற கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.

 

கூட்டத்தில் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துதானே பேசப்போகிறார்கள். அந்தத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்ததானே பத்திரிகை, ஊடகங்கள். இதில் என்ன ரகசியம் வெளியாகிவிடப்போகிறது. அரசுக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அமரலாம், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகையாளர்கள் அமரக்கூடாது என்பது என்ன நியாயம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளே வரக்கூடாது எனச் சொல்லி தடைப்போட்டார்கள். மக்கள் பிரதிநிதியாக இல்லாத அதிமுகவினர் பலரும் ஆய்வுக்கூட்டத்தில் அமர்ந்து கேள்விகள் கேட்டனர். அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்ஃபோன்கள் வழியாக சமூகவலைதளங்களில் கூட்டத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்தார்கள். இப்போது திமுக ஆட்சி நடக்கிறது, கடந்தகால அதிமுக அமைச்சர்களைப் போல், இப்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சரும் செய்தியாளர்களை வெளியே அனுப்பச் சொல்வது சரியா என்கிற கேள்வி எழுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.