Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; இன்று தீர்ப்பு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Minister Senthil Balaji Bail Petition Judgment today

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிமன்றம், அவருக்கான நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி அறிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அதே சமயம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 6 ஆவது முறையாக 14 நாட்களுக்கு நீட்டித்து அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தையை ஒப்படைப்பதில் அரசு மருத்துவமனை அலட்சியம்; ஊழியர் பணியிடை நீக்கம்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Negligence of government hospital in handing over baby

வட சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மசூத் - சௌமியா தம்பதியினர். இதில் சௌமிய கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென சௌமியாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் சாலையில் தண்ணீர் இருந்ததால் சௌமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்பதால் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சௌமியாவையும், குழந்தையையும் கொண்டு சென்றனர். அங்கு சௌமியாவிற்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளனர். 

பின்னர் இறந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றி கொடுக்காமல், மருத்துவமனை பிணவறை ஊழியர் அட்டைபெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில், அரசு மருத்துவமனையின் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை துணிகள் வைத்து சுற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தால் நாங்கள் சுற்றிக் கொடுத்திருப்போம். அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார். 

Next Story

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; மத்திய குழு சென்னை வருகை 

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
'Miqjam' storm damage; Central Committee visit Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மிக்ஜாம் புயம் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு நாளை (11.12.2023) சென்னை வர உள்ளது. இந்த குழுவின் ஆய்வுக்கு பின்னர் தேவைப்படும் நிவாரணத்தை மத்திய மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.