கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று (13/05/2022) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்திப் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கிறதா? இந்தி உள்பட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது; மூன்றாவது மொழியாக எது வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழகத்தில் இன்று படிப்பில் பெண்கள் ஆர்வமாக உள்ளனர்; இதுதான் திராவிட மாடல், இது பெரியார் மண். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களைப் பின்பற்ற தயார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை; மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படும். அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் தந்து கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையால் பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழை கற்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.