Skip to main content

“போதைப்பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Minister i periyasamy speech at dindigul

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்ளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முதன்மை கல்வி அலுவலர் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

நிகழ்ச்சியில், அமைச்சர் ஐ.பெரியசாமி போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு விதிமுறைகளை வாசிக்க, அரசுத் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி பிர திநிதிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், 203 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியதால் கடந்த 10 வருடங்களாக புரையோடிய போதைப் பொருள்கள் புழக்கம் இன்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளியின் வளர்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பங்கு அதிகம் உள்ளது. 

 

ஒரு சமுதாயத்தின் அடித்தளம் பள்ளியில் தான் உருவாகுகிறது. திருமலைராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு எல்லா வகைகளிலும் நாம் உறுதுணையாக இருந்துள்ளோம். தி.மு.க. ஆட்சியின் போது 10 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதிலிருந்து, கட்டிடங்கள் அமைப்பதிலிருந்து அனைத்திற்கும் நிதி உதவி வழங்கியுள்ளோம். இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிவதால் தலைசிறந்த பள்ளியாக இந்த பள்ளி உள்ளது. மாணவர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பழக்கத்தின் விளைவுகள் தெரியாமல் மாணவர்கள் பழக்கதை ஏற்படுத்திவிட்டு அதனை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்படுத்திவிடும். 

 

இளம் வயதில் மாணவர்கள் அறியாமல் பழகும் இந்த போதை பழக்கவழக்கம் மாணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தாரையும் பாதிக்கும். மாணவர்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி  எதிர்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. நல்ல உடல் நலத்துடன் மாணவர்கள் வாழ்ந்து உயர்கல்வி கற்க வேண்டும் என்று மாணவ சமுதாயத்தை வாழ்த்துகிறேன். தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டியை அவர்கள் பயன்படுத்தி நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்