Skip to main content

"தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி!  

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

mettur dam water opening minister pressmeet at cuddalore district

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக 'கோவிட் கடலூர்' என்ற இணையதள சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில், தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

 

அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கரோனா சிகிச்சைப் பெறுபவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் விவரம், தடுப்பூசி குறித்த விவரங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றை https://covidcarecuddalore.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தித் தெரிந்துக் கொள்ளலாம்.

 

கடலூர் மாவட்டத்தில் அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு 800- லிருந்து 500 ஆக குறைந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப் படி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்தால் மட்டுமே  கட்டுப்படுத்த முடியும். தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. சளி, காய்ச்சல் இருந்தால் மருந்தகங்களில் மருந்து வாங்கக் கூடாது. மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். காய்ச்சல் பாதித்த மக்களுக்கு மருந்து வழங்கும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மருந்தகங்கள் மூடப்படும்"  என்றார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12- ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

 

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும் டெல்டா பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார 68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கும் போது சில நாட்களிலேயே கடைமடை பகுதிக்கு சென்று விடும் வகையில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன.  வேளாண்துறை வாயிலாக அந்த பகுதி மக்களுக்கு உரம், நெல், விதைகள் உள்ளிட்டவைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.