Skip to main content

மருத்துவத்துறை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

 

mbbs students dharmapuri government medical college doctor suspended


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவிகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், தடயவியல் துறை உதவி பேராசிரியர் சதீஸ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

 

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தடயவியல் மருத்துவத்துறை உதவி பேராசிரியராக சதீஸ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் தந்ததாக  புகார் எழுந்தது. 

 

இது தொடர்பாக, இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மருத்துவக்கல்லூரி இயக்குநர், கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கடந்த 2020- ஆம் ஆண்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறோம். இங்கு உதவி பேராசிரியராக உள்ள சதீஸ்குமாரால் நாங்கள் வகுப்பில் பல்வேறு அசவுகரியங்களை அனுபவித்து வருகிறோம். 

 

வகுப்பில் சில மாணவிகளின் தலையில் வருடுவது, இரட்டை அர்த்த சொற்களை பேசுவது, மாணவிகளின் பின்னால் நின்றுகொண்டு மேலே சாய்வது, சிலர் மீது உரசுவது, மாணவிகளை பாட்டு பாடச் சொல்வது, மாணவிகளைச் சுற்றி சுற்றி வந்து பாடம் நடத்துவது என வரம்பு மீறி செயல்படுகிறார். இதனால் அவருடைய வகுப்பை நாங்கள் புறக்கணித்து வந்தோம். 

 

mbbs students dharmapuri government medical college doctor suspended

 

இதனால் எங்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கண்மணி, காந்தி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில் மருத்துவர் சதீஸ்குமார் மீதான புகார்கள் அனைத்தும் ஊர்ஜிதமானது. 

 

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது அவர், தன் மீது கூறப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய்யானவை என பதில் அளித்தார். எனினும், மூவர் குழு விசாரணையில் புகார்கள் உண்மை எனத் தெரிய வந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்ய இயக்குநரகம் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், ''மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி. அவர்கள் எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். மருத்துவர் சதீஸ்குமார் மீது புகார் வந்த உடனே, மூவர் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார். 

 

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே தடயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் மதன்ராஜ், வகுப்பில் இரட்டை அர்த்த சொற்களைப் பயன்படுத்தியதாக வந்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், மீண்டும் மருத்துவர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.