Skip to main content

மயிலாடுதுறையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

Fishing

 

சுருக்குமடி வலைக்கு அனுமதி தர கோரிக்கை விடுத்து மயிலாடுதுறையில் மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பலையாறு முதல் சந்திரப்பாடி வரையிலான 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி தரக் கோரிக்கை விடுத்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே சுருக்குமடி வலைக்கு அனுமதி தரவேண்டும் அல்லது அனுமதி தர மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ல் விதிக்கப்பட்டுள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து போராட்டத்தை தொடங்கினர்.

 

நேற்று மாலை மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த போராட்டமானது காலவரையின்றி தொடரும் என மீனவர்கள் போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவும் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் மயிலாடுதுறை மடவாமேடு உட்பட நான்கு இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் எந்தவித அரசு அதிகாரிகளும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், மடவாமேடு கிராமத்தில் உள்ள மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு! 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
21 fishermen of Tamil Nadu have been sentenced to judicial custody

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (16.03.2024) காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே இன்று (17.03.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே சமயம் மீனவர்கள் 21 பேரை சிறைப் பிடித்து ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 21 பேரையும் மார்ச் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டதுடன் இவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.