Skip to main content

“முதல்வர் உத்தரவுப்படி அனைத்து இடங்களிலும் மாஸ் கிளீனிங்”- அமைச்சர் பேட்டி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Mass cleaning everywhere as per the order of the Chief Minister

 

ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் ஓடையில் 20ந் தேதி மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இந்தப் பணியைத் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டு அதனை ஆய்வு செய்தார். பிறகு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் அனைத்து இடங்களிலும் முதல்வர் உத்தரவுப்படி மாஸ் கிளீனிங்  செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று காசிபாளையம் ஓடை சுத்தப்படுத்தப்பட்டுத் தூர்வாரப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 85 இடங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.  

 

சோலார், அரச்சலூர், கனிராவுத்தர் குளம் போன்ற பகுதிகளில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பெரிய அளவு குறைபாடுகள் எதுவும் இல்லை. சிறிய சிறிய குறைபாடுகள் உள்ளன. கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடனும், பயனாளிகள் தங்கள் தரப்பில் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். சில பயனாளிகளால் பணம் கட்ட முடியவில்லை.  அவர்களுக்கு சுலப முறையில் வங்கிகளில் கடனுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுவசதித் துறையில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சித்தோடு அருகே 85 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது, ஆனால் அந்த இடம் கரடு முரடாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அங்கு வெட்டி வைத்தால் அருகில் உள்ள மற்ற வீடுகள் பாதிக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று இடத்தில் அவர்கள் அனுமதியுடன் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஓடை புறம்போக்கில் உள்ளவர்களுக்குப் பட்டா வழங்க இயலாது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது