
குளித்தலை அருகே பழுதடைந்த மின் மோட்டாரை கிணற்றிற்குள் இறங்கி எடுக்கச் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்தவர் மருதை மகன், விவசாயி ரெங்கதுரை (45). இவர் இன்று காலை சின்னப்பனையூரில் அம்சு என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதடைந்ததால் அதனைச் சரி செய்வதற்காகக் கிணற்றுக்குள் மூழ்கி மோட்டாரைக் கயிறு கட்டி மேலே கொண்டு வருவதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. கிணற்றுக்கு மேலே இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் பார்த்தனர்.
இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி ரெங்கதுரையின் உடலைச் சடலமாக மீட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் ரெங்கதுரையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.