Man arrested for stealing handbags from passengers!

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் விற்பனையாளர் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2000 பணம் பறித்ததாக இரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து இரயில்வே காவல்துறையினர் அந்தப் புகார் மீது விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த விற்பனையாளர் கூறிய இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேம்ராக்களை ஆய்வு செய்தனர். அதில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

Advertisment

இந்நிலையில், இன்று ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் குமார்(32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அந்தப் பணப்பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், ஆல்வின் குமார் மீது சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளிடமிருந்து கைப் பைகள் திருடும் வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 13க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆல்வின் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.