Skip to main content

'சென்று வா விவேக்': கமல்ஹாசன்!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

makkal needhi maiam kamal haasan video speech at twitter page

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது, "வணக்கம், ஒரு கலைஞன் தன் திறமையால் தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதும், மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு ஆளனாக அமைவதும் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகையான கலைஞர்களைக் குறிக்கும். ஆனால் தன்னுடைய கலை, சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். தனக்குப் பின்னும் அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்னும் கலைஞர்கள்தான், அவர்கள் இறந்த பிறகும் ஆயுள் உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படி என்.எஸ்.கே. அவர்களைச் சொல்லும்போது விவேக்கின் பெயர் ஞாபகம் வராமல் இருக்காது. சின்னக்கலைவாணர் என்ற பெயரை அவர் விரும்பி, தனக்கு வர வேண்டும் என்று நினைத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும்போதே இறந்துபோனார் என்பதுதான் உண்மை. அவருக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற விதைகள் மரமாக வளரும். என்னைப்போலவே அவரும் அதை தக்க தருணத்தில் உணர்ந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

 

ஆனால் இன்னும் எஞ்சிய வேலை நிறைய இருக்கும்பொழுது, அவர் சென்றது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் என் பெர்ஸனல் ஃப்ரண்ட். அவர் என்கூட நடிக்கலங்கறது வருத்தம். ஏன்னா இரண்டு பேரும் ஒரே பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள். ஒரே குருவின் பாதத்தைத் தொட்டு வணங்கியவர்கள். அதனால் நாங்க இரண்டு பேரும் ஒன்னா தோல் உரசவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அந்த மாதிரி விபத்துகள் நடப்பது உண்டு இந்த துறையில். அதை நிவர்த்தி செய்ய வேண்டும். நீங்க அரசியலுக்குப் போயிட்டீங்கன்னா, அப்புறம் என்கூட நடிக்க முடியாமலேயே போய்விடும் அப்படினு பயந்தார். அதற்காகத்தான் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்பொழுதும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். இன்னும் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்ட அந்த உரையாடல் அப்படியே நிற்கிறது. அந்தக் கனம் என் மனதில் இருக்கிறது.

 

 

அதை சோகமாக எடுத்துக்கொள்ளாமல், அங்கு நாங்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், செய்ய வேண்டிய வேலைகள் என்று நாங்கள் ஒரு சின்னத் திட்டங்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் அவர் போட்ட பதியங்களில், விதைகளில் ஒன்றாக நான் எடுத்துக்கொண்டு, அதைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். கலைஞர்கள் வாழ்க்கையை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கான பெரிய எடுத்துக்காட்டு விவேக் அவர்கள். அதை எப்படி சீரியஸா... பரத நாட்டியமா இருக்கலாம், கலையா இருக்கலாம், பாட்டா இருக்கலாம், காமெடியாகக் கூட இருக்கலாம். ஆனால் அதில் கூட நீங்கள் சென்று அவர்கள் மனதைத் தொட முடியும் என்பதற்கான ஒரு நிரூபணம். அந்த மாதிரி நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் இருக்கும்போதே போற்றப்பட வேண்டும். அப்படி போற்றப்பட்டவர்தான் விவேக் அவர்கள். அவருக்கு வாழ்த்துகள் சொல்லியே பழகிவிட்ட எனக்கு, இரங்கல் சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த நிலைமை வரும் என்பதனால் தயங்காமல் சொல்கிறேன். மிகவும் வருந்துகிறேன்; இதுபோன்ற கலைஞர்கள் இனியும் தோன்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. 

 

ஒரு நல்ல பிள்ளையை அனுப்பி வைக்கும்போது 'சென்று வா' என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோல், நல்ல கலைஞர்களை நாம் அனுப்பி வைக்கும்போது 'சென்று வா, வேறொரு கலைஞனாக’ என்று சொல்ல வேண்டும். அப்படி விவேக் போன்ற ஒரு கலைஞர் மீண்டும் உருவாக வேண்டும். 'சென்று வா விவேக்’ என்று சொல்கிறேன். இதுபோன்ற பல கலைஞர்களை நாம் வழியனுப்பித்தான் ஆக வேண்டும். அப்போதெல்லாம், அதேபோல் ஒரு கலைஞர் மறுபடியும் உருவாக வேண்டும் என்ற வாழ்த்துடன் அவர்களை வழியனுப்பி வைப்போம்". இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்.