Skip to main content

சுங்கச்சாவடியில் போராட்டம்; ஆர்.பி. உதயகுமார் கைது!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Madurai Kappalur toll plaza incident RB Udayakumar arrested

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது வரை 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் இன்று முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தி வருகிறது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்று வருகின்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போராட்டக்காரர்களுடன் திடீரென காவல்துறையினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்