Skip to main content

குறைந்த கூலி... அதிக லாபம்... உயரப் போகும் கோழி விலை!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle

 

மக்கள் இறைச்சிக்காக அதிகம் சாப்பிடும் உணவாக இருப்பது பிராய்லர் கோழிகள். இந்த கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள். தமிழகம் முழுவதும் 25,000 கோழிப்பண்ணைகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில்,  தங்களுக்குக் கோழி நிறுவனங்கள் வளர்ப்புக் கூலி உரிய வகையில் வழங்கவில்லை எனக் கூறி 11 ஆம் தேதியில் இருந்து கோழி வளர்ப்பில் ஈடுபடமாட்டோம் எனக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் மாநிலத் தலைவர் மூர்த்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நம்மிடம் கூறினார். "தமிழகத்தில் 25,000 கோழிப்பண்ணைகளில் விவசாயம் சார்ந்த தொழிலாக இதைச் செய்து வருகிறோம். பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தப் பண்ணைகளுக்கு ஒவ்வொரு கோழி நிறுவனங்களும், குஞ்சு மற்றும் தீவனங்களை வழங்கி வருகிறது. அதனைப் பெற்றுக்கொண்ட பண்ணையாளர்கள் 40 முதல் 50 நாட்கள் வரை கோழிகளை வளர்த்துக் கொடுக்கின்றனர். இதற்குக் கூலியாக கிலோ ஒன்றுக்கு மூன்று முதல் ஆறு ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.


இந்தத் தொகை முழுமையாகப் போதவில்லை என்று பலமுறை கோரிக்கைகளை வைத்தோம். சென்ற 2010 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தக் கோழி நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. கோழி வளர்ப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டது. இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ 3.50 முதல் ஆறு ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள். இதனால், கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இப்போது, கிலோ ஒன்றுக்கு 5 வரை மட்டுமே தர முடியும் என அவர்கள் கூறிவிட்டனர்.

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle


நாங்கள் கேட்ட ஒரு கிலோவுக்கு 12 ரூபாயை தர முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால் 11ஆம் தேதி முதல் எங்கள் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளை, அந்தக் கோழி நிறுவனங்களே வந்து ஆட்களை வைத்து, குஞ்சுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். எங்கள் பண்ணையில் உள்ள கோழிகளை வளர்த்துக் கொடுக்க உழைப்புக்கேற்ற ஊதியம் தான், இந்த கோழி நிறுவனங்கள் தர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

இவர்களின் நியாயமான போராட்டத்தால் கோழி உற்பத்தி குறையும். இதனால், கோழி நிறுவனங்கள் விலையை ஏற்றி, மக்கள் தலையில் தான் கட்டப்போகிறது. தற்போது பிராய்லர் கோழிகளின் விலை என்பது ஒரு கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. குஞ்சு, தீவனம், வளர்ப்புக் கூலி என்று கணக்கிட்டால் முதலீடு என்பது ஐம்பது ரூபாயைத் தாண்டாது. ஆனால், இரவு, பகலாக இந்தக் கோழிகளை வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய கூலியை தராமல், அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள். 

 

உழைப்பாளர்களுக்குக் குறைந்த கூலி, வாங்கும் நுகர்வோருக்கு அதிக லாபத்தில் விற்பனை. இது தானே முதலாளித்துவக் கோட்பாடு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.