நேற்று தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
நேற்று தூத்துக்குடி மாவட்டம் அனவரதநல்லூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எல்.கே.ஜி மாணவன் செல்வன் நவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 7 மாணவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசிக்கொண்டே ஆட்டோவை இயக்கியதாக அதில் பயணித்த மாணவன் ஒருவன் தெரிவித்திருந்த நிலையில், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி ராஜை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை தற்போது கைது செய்துள்ள முறப்பநாடு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.