Skip to main content

அங்கன்வாடி சத்துணவில் பல்லி?- 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Lizard in Anganwadi Nutrition? - 13 children admitted to hospital!

 

திருப்பத்தூரில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், உணவினை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது சோமலாபுரம். இங்கு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்றுவருகின்றனர். நேற்று (16.11.2021) 14க்கும்  மேற்பட்ட குழந்தைகள் அந்த அங்கன்வாடி மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கன்வாடி ஆசிரியர் அஞ்சலி என்பவர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திய பின்னர், மல்லிகா என்ற சமையலர் சத்துணவைப் பரிமாறியுள்ளார்.

 

குழந்தைகளின் வீடுகள் அருகிலேயே இருப்பதால், உணவு நேரத்தின்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களாகவே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்படும் உணவைக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டுச் செல்வது வழக்கம். அதன்படி 13 குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளனர். அப்போது ஒரு குழந்தையின் தாய், கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைக்கு ஊட்டும்போது அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலியிடமும், சமையலர் மல்லிகாவிடமும் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு ஒரு குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த அனைவரும் குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

தற்போதுவரை சிகிச்சையில் இருக்கும் 13 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சத்துணவில் பல்லி இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஓ. காயத்ரி சுப்பிரமணி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கன்வாடி திட்ட இயக்குநர் கோமதியும் குழந்தைகள் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரித்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.