Skip to main content

‘பப்ஜி’மதன் பேசியதை முழுவதும் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடுங்கள்..... மதனின் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவு!! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021
Listen to the whole speech of ‘PUBG’ Madan and come and argue tomorrow ..... Judge orders Madan's lawyer !!

 

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி அவரின் முன் ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு  அறிவுறுத்தியுள்ளது. மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூபுக்கு பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை அதிகமாக்கி, 7.8 லட்சம்  சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர்.

 

சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். அதன்பின்னர் பப்ஜி மதன் தலைமறைவானார்.  இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Listen to the whole speech of ‘PUBG’ Madan and come and argue tomorrow ..... Judge orders Madan's lawyer !!

 

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதனின் யுடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள் எனவும், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. 

 

அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார். அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

 

அதேசமயம் மதனின் யுடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடி-யாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை நீதிபதி நாளைக்கு தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.