சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (45). கூலித்தொழிலாளி. திருமணமானவர். குழந்தைகள் உள்ளன. பாலியல் தொல்லை காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுடன் குமரவேலுக்கு 13 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோது, அந்தப் பெண்ணிறகு முதல் கணவர் மூலம் பிறந்த 2 வயது பெண் குழந்தையும் இருந்தது. அப்போது, குமரவேல் அந்தக் குழந்தையையும் தன் குழந்தையாகவே ஏற்றுக்கொண்டு வளர்த்து வந்தார். பள்ளிச் சான்றிதழ்களில் கூட அந்தக் குழந்தையின் தந்தை என தனது பெயரையே பதிவு செய்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு, அந்தப்பெண் குழந்தைக்கு 15 வயது பூர்த்தி ஆனது. திடீரென்று ஒருநாள் கடும் வயிற்று வலியால் அந்தச் சிறுமி அவதிப்பட்டாள். பதற்றம் அடைந்த தாயார், மகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி, நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதையறிந்து தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். சிறுமியிடம் விசாரித்தபோது, குமரவேல்தான் மகளென்றும் பாராமல் அவளை கர்ப்பமாக்கி இருப்பது தெரிய வந்தது. மனைவி வேலைக்குச் சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு குமரவேல் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதனால்தான் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் குமரவேல் மீது புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குழந்தையின் வயிற்றில் இருந்த கரு, நீதிமன்ற அனுமதியுடன் கலைக்கப்பட்டது. சிறுமிக்கு நடத்திய டி.என்.ஏ. பரிசோதனையில், கர்ப்பத்திற்கு குமரவேல்தான் காரணம் என்பதும் நிரூபணமானது.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குமரவேலுக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, டிச. 29ம் தேதி தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி வாதாடினார்.