தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (30.11.2024) கரையைக் கடந்தது. இதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. மேலும் இது நாளை (03.12.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கடலூரில் தென்பெண்ணை ஆறு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யச் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்றார். அப்போது அவரிடம் த்தை வீடியோ காலில் தொடர்புகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அதே சமயம் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமியையும், தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர். வழங்கினார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை எ.வ. வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சு. முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்துக்கு ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.