![“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari](http://image.nakkheeran.in/cdn/farfuture/--Xm1yUvhWtyLcoQ4-NntRjY69iLMLvB3wC6Kib8j6E/1663678915/sites/default/files/inline-images/th_3218.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.