தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என 10 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அதே சமயம் சட்டப்பேரவையின் கூட்டம் நடைபெற்று முடிந்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளபடி இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றும், நாளையும் (10.12.2024) என இரு நாட்கள் நடைபெற உள்ளது.
அதன்படி முதல் நாளான இன்று, மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெஞ்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். அதன் பின்னர் 2024 - 25ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்காகத் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே மதுரை டங்ஸ்டன் சுங்க உரிமை ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிமங்களுக்கான ஏல உரிமையை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தித் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் நாளான நாளை கேள்வி நேரம் முடிந்த பின்னர் துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க உள்ளார். அதன் பின்னர் கூடுதல் நிதி ஒதுக்குவதற்காகத் துணை பட்ஜெட்டில் தெரிவித்துள்ளபடி சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.