![Leader of the Opposition assigned to Congress! DMK candidate wins without contest!](http://image.nakkheeran.in/cdn/farfuture/tdoj08CMqokI1J0P0aEjwTjDaVOlZiUiI-qOSs2W5ek/1646378740/sites/default/files/inline-images/th-1_2867.jpg)
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 8, பாஜக 1, அதிமுக 1, காங்கிரஸ் 2, சுயேச்சை 3 என மொத்தம் 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடுகளை அறிவித்தது. அதன்படி பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைமை அறிவித்து இருந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் சியாமளா போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.
![Leader of the Opposition assigned to Congress! DMK candidate wins without contest!](http://image.nakkheeran.in/cdn/farfuture/G2v2kZGk36DxrZudBZU7xn-4viR76BYNFpYnnK3Mpyo/1646378756/sites/default/files/inline-images/th-2_804.jpg)
அதனைத் தொடர்ந்து இன்று காலை வேட்புமனுத் தாக்கலுக்கு தயாராக இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு, முன்மொழிய வழிமொழிய என திமுகவினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால், அவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், திமுக பேரூர் செயலாளர் அருண் குமாரின் மனைவி 3வது வார்டு உறுப்பினர் கல்பனாதேவி பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசுந்தரி, திமுகவைச் சேர்ந்த கல்பனாதேவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பாக போட்டியிட்டு திமுக வெற்றி பெற்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி பகுதியில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. சுகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.