Skip to main content

தவறவிட்ட நகையைக் கண்டெடுத்துக் கொடுத்த பூக்காரப் பெண்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

lady Florist finds lost jewelry

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வேலாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி 36 வயதான ராஜகுமாரி. அவருக்கு சொந்தமான 5 பவுன் நகையை தங்களது குடும்பச் செலவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் திருக்கோவிலூர் நகரிலுள்ள ஒரு அடகுக் கடையில் அடமானம் வைத்திருந்தார் ராஜகுமாரி.

 

தற்போது, விவசாய அறுவடை முடிந்து, மகசூல் விற்பனை செய்த பணத்தில், தான் அடமானம் வைத்த நகையை மீட்டுச் செல்வதற்காக நேற்று திருக்கோவிலூர் சென்றுள்ளார். தான் அடமானம் வைத்த நகைக்கடையில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது 5 பவுன் நகையை வாங்கி கையில் வைத்திருந்த பர்ஸில் வைத்துள்ளார். அதை ஒரு ஒயர்கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு ஊருக்குச் செல்வதற்காக கடைவீதி வழியே பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

 

பஸ்டாண்டு வந்ததும் வைத்திருந்த ஒயர்கூடையில் ஐந்து சவரன் நகையைக் காணவில்லை. நகை, வரும் வழியில் தவறி விழுந்துவிட்டதாக எண்ணி பதறிப் போனார் ராஜகுமாரி. பின்னர், உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று, வரும் வழியில் தான் அடகுக் கடையில் மீட்டுக்கொண்டு வந்த நகையைக் காணவில்லை என்று கூறியுள்ளார். போலீசார் அவர் அடகுக் கடையில் இருந்து வந்த வழியே நகையைத் தேடிச் சென்றனர். அந்த வீதியில் அக்கம்பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் மற்றும் எதிரே நடந்து வந்தவர்கள் எனப் பலரிடமும் விசாரித்தபடியே சென்றனர். அப்போது அந்த வீதியில் ஒரு இடத்தில் பூக்கடை வைத்திருந்த 39 வயது சசிகலா என்பவர், போலீசார் விசாரித்ததைப் பார்த்ததும் வீதியில் கிடந்த பர்ஸை எடுத்து வைத்திருந்ததை உடனே அவர் போலீசாரிடம் கொடுத்து, 'இதுதானா என்று பாருங்கள்!' எனக் கொடுத்துள்ளார்.

 

அதில், ராஜகுமாரியின் 5 பவுன் நகை பத்திரமாக இருந்தது. அப்போது பூக்கடை சசிகலா போலீசாரிடம், "இந்த பர்ஸ் என் கடை அருகே கீழே விழுந்து கிடந்தது. அதை தற்செயலாகப் பார்த்த நான் எடுத்தேன். அதில், நகை இருந்தது. அது யாருடையது என்பது குறித்து அந்த பர்ஸில் எந்த விவரமும் இல்லை. சரி தவறவிட்டவர்கள் தேடிவந்து கேட்டால் கொடுத்துவிடலாம் என்று எடுத்து வைத்திருந்தேன். நீங்கள் அதை தேடி வந்ததும் அதைக் கொடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அவரின் நேர்மையைக் கண்டு வியந்துபோன போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் கையாலேயே நகையைத் தவறவிட்ட ராஜகுமாரியின் கையில் ஒப்படைக்கச் செய்தனர். பூக்கடை சசிகலாவின் நேர்மையை அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.