Skip to main content

ஐந்து வருடங்களாக அவதி; மாணவர்களுக்காக ஒன்றிணைந்த பாஜக - காங்கிரஸ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Kumari District Pathmanabapuram School issue

 

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

 

இதில் தொடக்கப் பள்ளியில் 97 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடக்கப்பள்ளி கட்டிடம் 2017-ல் ஒக்கி புயலால் சேதமடைந்தது. ஆனால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதே கட்டிடத்தில் வகுப்புகளை நடத்தி வந்தனர். மேலும், அந்தக் கட்டடத்தில் மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை எனப் பெற்றோர்கள் பிரச்சனை எழுப்பியதால் கடந்த மார்ச் மாதம் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு அருகில் இருந்த இன்னொரு கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வந்தன.

 

Kumari District Pathmanabapuram School issue

 

இந்த நிலையில், அந்தக் கட்டிடமும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதோடு மழை நீர் வகுப்பு அறையில் வழிகிறது. அதுபோல் கழிவறைகளும் இடிந்து கிடப்பதால் மாணவிகள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இது தொடர்பாக பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழுவும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த பாஜக மற்றும் காங்கிரசார் மாணவர்களுக்கு ஆதரவாக சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் கையில் பதாகையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து அங்கு வந்த பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக் கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.65 லட்சம் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கட்டிடங்கள் கட்டுவதாகவும், தற்போது வகுப்புகள் நடைபெறுவதற்கு தற்காலிக வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.